சிதம்பரம் அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சிதம்பரம் அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-15 16:51 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதடைந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் குடிநீா் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் சிதம்பரம்- நெடுஞ்சேரி புத்தூர் சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால்அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு  வரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்