நில மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை: கை, கால் செயலிழந்த கணவருடன் ஆம்புலன்ஸ் வேனில் வந்து பெண் புகார்

நில மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கை, கால் செயலிழந்த கணவருடன் ஆம்புலன்ஸ் வேனில் வந்து பெண் புகார் ஆவடி துணை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு.

Update: 2021-07-16 05:31 GMT
ஆவடி, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஸ்வால்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமி (வயது 50). லாரி டிரைவரான இவருடைய கணவர் பொன்னுவேல், கடந்த 2019-ம் ஆண்டு முதல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இடது கை, கால் செயலிழந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை ஆவடியில் உள்ள அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகத்துக்கு கை, கால் செயலிழந்து படுத்த படுக்கையாக இருக்கும் தனது கணவருடன் ஆம்புலன்ஸ் வேனில் வந்து லட்சுமி ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

திருநின்றவூர் பகுதியில் உள்ள எனது கணவருக்கு சொந்தமான பூர்வீக சொத்தை ஒரு பெண் உள்பட 2 பேர் மோசடியான முறையில் பத்திரப்பதிவு செய்து அபகரித்து கொண்டனர். இதனை தட்டிக்கேட்டால் எங்களை மிரட்டுகிறார்கள். எங்களது நிலத்தை அபகரித்து மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்