மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழுவை ஏன் அமைக்கக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2021-07-16 13:58 GMT
சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வேலுமணி உள்பட பலர் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் எல்லாம், நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘உலகின் பெரிய கடற்கரையான மெரினாவை முறையாக பராமரிப்பதில்லை. அதை பற்றி யாரும் கவலை கொள்வதும் இல்லை’’ என்று கருத்து தெரிவித்தனர்.

அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், முறையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியின் மண்டல அதிகாரியையும், சென்னை போலீஸ் கமிஷனரையும் எதிர்மனுதாரர்களாக தாமாக முன்வந்து நீதிபதிகள் சேர்த்தனர்.

மீனவர்கள் அங்காடி

பின்னர், நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மெரினா கடற்கரையில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா? தினமும் எவ்வளவு குப்பைகள் அங்கு சேகரிக்கப்படுகிறது? மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் கழிவறைகள் மற்றும் நடமாடும் கழிவறைகள் எத்தனை உள்ளன?

கடற்கரை பராமரிப்பிற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? கடை உரிமையாளர்களிடம் இருந்து எவ்வளவு வாடகை வசூலிக்கப்படுகிறது? குற்றங்கள் நடக்காத வகையில் இரவு 10 மணிக்கு பிறகும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனரா? மெரினா லூப் சாலை அருகிலேயே மீனவர்களுக்கான மீன் அங்காடியை ஏன் அமைக்கக்கூடாது? மெரினா கடற்கரையின் அழகை பாதுகாக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?

விளக்கம் வேண்டும்

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை, காவல்துறை, சுற்றுச்சூழல் மற்றும் சமுக ஆர்வலர்கள், வியாபாரிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவை தமிழக அரசு ஏன் அமைக்கக்கூடாது?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விரிவான விளக்கத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

மேலும் செய்திகள்