மனைவி கல்லறையில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே மனைவியின் கல்லறையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-16 19:04 GMT
மேலகிருஷ்ணன்புதூர்:
நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே மனைவியின் கல்லறையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முதியவர்
நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே சின்னணைந்தான்விளையை சேர்ந்தவர் துரைசாமி (வயது 71), தொழிலாளி. இவருக்கு சித்திரை கனி என்ற மனைவியும், 7 பிள்ளைகளும் உண்டு. பிள்ளைகள் அனைவரும் தனியாக வசித்து வருகிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை கனி இறந்து விட்டார். இதனால் துரைசாமி, தன்னுடைய மகன் விஸ்வநாதன் பராமரிப்பில் இருந்து வந்தார். மனைவி சித்திரை கனி இறந்தது முதல் துரைசாமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். 
கல்லறையில் தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை துரைசாமி, மனைவியின் கல்லறைக்கு சென்றுள்ளார். பின்னர், கல்லறையின் மேல் அமர்ந்து மதுவில் விஷம் கலந்து குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, துரைசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து துரைசாமியின் மகன் விஸ்வநாதன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கல்லறையில் விஷம் குடித்து கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்