நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணி

கள்ளக்குறிச்சியில் நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணியை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வுசெய்தார்

Update: 2021-07-18 16:06 GMT
கள்ளக்குறிச்சி

இயற்கை உரம் தயாரிக்க 

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட அரசு அலுவலக வளாகங்கள், வணிக வளாகங்கள், அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர் குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். 

அப்போது அரசு அலுவலக வளாகங்களை சுற்றி செடி, கொடிகள் இல்லாமல் பராமரித்திடவும், அரசு அலுவலகத்தில் உள்ள குப்பைகளை முறையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கவும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உருவாகும் மக்கும் கழிவுகளை குடியிருப்பு வளாக பகுதியிலேயே இயற்கை உரம் தயாரித்து மாடித் தோட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளவும் உத்தரவிட்டார்.

எரிவாயு தகன மேடை

இதைத் தொடர்ந்து நகராட்சி மயான வளாகத்தில் நவீன எரிவாயு தகன மேடையை பராமரிக்கும் பணியை ஆய்வுசெய்த கலெக்டர் ஸ்ரீதர் மயான வளாகங்களில் பூமாலை கழிவுகள் தேங்காதவகையில் அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், மயானத்தின் வெளிப்புறப் பகுதியில் சாலையோரப் பூங்கா அமைத்திடவும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கச்சிராயப்பாளையம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான வி.ஐ.பி.கார்டன் மனைப்பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ள பூங்கா பகுதியில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்து, நகர பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்த அதிக அளவில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகளை வளர்த்து பேணிக் காத்திட வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் குமரன், பொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், பணி மேற்பார்வையாளர் ஜீபேர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்