குடிபோதைக்கு கணவர் அடிமையானதால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை ஆர்.டி.ஓ.விசாரணை

குடிபோதைக்கு கணவர் அடிமையானதால் விரக்தியடைந்த பெண், தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-18 23:06 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கவுரி (வயது 24). இவர்களுக்கு தீக்சிதா(3) என்ற மகளும், 1½ வயதில் அஸ்வின் என்ற மகனும் இருந்தனர்.

பெயிண்டரான ரமேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சரிவர வேலைக்கு செல்லாமல், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

நேற்று காலை ரமேஷ் வழக்கம்போல் கவுரியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் அவரிடம் பணத்தை வாங்கிவிட்டு மது அருந்த வெளியே சென்றுவிட்டார்.

குழந்தைகளை கொன்று தற்கொலை

இதனால் விரக்தி அடைந்த கவுரி, குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி, வீட்டின் கதவை பூட்டி உள்தாழ்ப்பாள் போட்டு விட்டு, மேற்கூரையில் இரும்பு குழாயில் தனது மகள் மற்றும் மகன் இருவரையும் தனித்தனியாக புடவையால் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் மற்றொரு புடவையால் கவுரியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் கூழ் ஊற்றுவதற்காக கவுரியை அழைக்க வந்தபோது, நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டுக்குள் கவுரி தனது 2 குழந்தைகளுடன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருநின்றவூர் போலீசார், தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்