சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது

உள்ளாடையில் மறைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது.

Update: 2021-07-21 00:21 GMT
ஆலந்தூர்,

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்து இறங்கிய சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்தனா். அப்போது விழுப்புரத்தை சோ்ந்த சந்துரு சக்திவேல் (வயது 23) என்பவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில், சக்திவேல் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகத்தின் பேரில் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அங்கு எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.40 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 810 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சக்திவேலை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்