கயத்தாறு அருகே வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

கயத்தாறு அருகே வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்

Update: 2021-07-21 12:24 GMT
கயத்தாறு:
கயத்தாறு அருகே மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் பீட்டர் (வயது 35). இவர் பசுவந்தனை மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கெடுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கயத்தாறில் இருந்து பசுவந்தனை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருமலாபுரம் விலக்கு அருகே சென்றபோது, எதிரே கடம்பூரில் இருந்து கயத்தாறை நோக்கி சாலைப்புதூரை சேர்ந்த முத்தையாத் தேவர் மகன் பூல்பாண்டி என்பவர் ஓட்டிவந்த மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து  தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து ஓடிய வேன் எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த செல்லத்துரை(58) மீதும் மோதி நின்றது. இதில் செல்லத்துரை உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர்  ஓனமாக்குளம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர். இவர் கயத்தாறுக்கு முடிவெட்டுவதற்காக வந்து கொண்டிருந்தபோது, வேன் மோதி பலியாகியுள்ளார். தகவல் அறிந்த கயத்தாறுபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்ஆண்டனி திலீப் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்த பீட்டரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் செல்லத்துரை உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பூல்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்