வேலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

வேலூர் நகரில் போக்குவரத்துநெரிசலைகுறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உதவிபோலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-21 17:31 GMT
வேலூர்

போக்குவரத்து நெரிசல்

வேலூர் மாநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை குறைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் வேலூர் மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வேலூர் அண்ணாசாலை, ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சாரதி மாளிகைப் பகுதிகளில் வாகனங்கள் வரிசையாக நிற்கும் வகையில் சாலையில் கயிறு கட்டப்பட்டது.
கண்காணிப்பு கேமரா மூலம்

இந்த போக்குவரத்து நடவடிக்கை குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் கூறுகையில், வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் மாநகரில் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை வெற்றிகரமாக அமைந்தால் அடுத்த கட்டமாக ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள், போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் செல்பவர்கள் ஆகியோரை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இந்த நடவடிக்கை மேற்கொள்வதற்காக மாநகர் பகுதியில் உள்ள 300 கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படும்.
வேலூர் சாரதிமாளிகை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் சிக்னலில் நேரத்தை ஒழுங்குபடுத்துவது, வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்