மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-07-21 19:53 GMT
கோவை

மத்திய அரசு பல்வேறு கட்சி தலைவர்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து கோவையில் அனைத்து கட்சியினர் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது: -  மத்திய அரசு தனிநபர் உரிமைகளை மீறும் வகையில் பெகாசஸ் மென்பொருள் மூலம் முக்கிய தலைவர்களை உளவு பார்த்து உள்ளது. 

மேலும் பல்வேறு சமூக ஆர்வலர்களையும் கண்காணித்து வந்து உள்ளது. இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் இந்த புகார் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும். 

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே எரிபொருள் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் வக்கீல் கருப்பசாமி, ம.தி.மு.க. சேதுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சிவராமன், மே-17 இயக்கம் திருமுருகன் காந்தி, வெண்மணி, நேருதாஸ், கலையரசன், ராஜா உசேன், சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்