மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

விக்கிரமசிங்கபுரத்தில் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு ஆசிரியர்கள் சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-21 19:56 GMT
விக்கிரமசிங்கபுரம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் ஒன்றரை வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இருப்பினும் கிராம பகுதியில் உள்ள மாணவர்கள் அதிவேக இணையம், செல்போன் வசதி இல்லாததன் காரணமாக அவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதையொட்டி விக்கிரசிங்கபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அயன் திருவாலீஸ்வரம் கிராமத்திற்கு சென்று அப்பகுதியிலுள்ள கோவிலில் வைத்து சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
இதேபோல் அய்யனார்குளம், அனவன்குடியிருப்பு, பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதியிலும் அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்