கபினி அணை நிரம்பியது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியாக, மைசூருவில் உள்ள கபினி அணை நிரம்பியது.

Update: 2021-07-21 21:04 GMT
மைசூரு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியாக, மைசூருவில் உள்ள கபினி அணை நிரம்பியது. 

கபினி அணை நிரம்பியது

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை உள்ளது. இந்த அணை கடல்மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருகிறது. 

இதனால் கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே சென்றது. இந்த நிலையில் நேற்று மாைல கபினி அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  

6,333 கனஅடி தண்ணீர் திறப்பு

நேற்று மாைல 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 626 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 333 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதுபோல மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
124.80 அடி உயரம் கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 101 அடியாக இருந்தது. 

அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.  2 அணைகளில் இருந்தும் 6 ஆயிரத்து 333 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் கே.ஆர்.எஸ். அணையும் நிரம்பும் என்று நீர்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்