பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-07-21 21:32 GMT
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்த ரவுடி செல்லதுரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், டெனிபா உள்பட 32 பேரை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வசூர் ராஜா (வயது 35) என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் வசூர் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து வசூர் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதற்கான நகலை திருச்சி ஜெயில் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஏற்கனவே செல்லதுரை கொலை வழக்கில் கைதானவர்களில் 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்