முகநூல் மூலம் பழக்கம்: காதல் மனைவியுடன் வாழ மறுத்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு

முகநூல் மூலம் பழக்கமாகி காதல் திருமணம் செய்த போலீஸ்காரர், காதல் மனைவியுடன் வாழ மறுத்ததால் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Update: 2021-07-21 21:32 GMT
சங்ககிரி:
முகநூல் மூலம் பழக்கமாகி காதல் திருமணம் செய்த போலீஸ்காரர், காதல் மனைவியுடன் வாழ மறுத்ததால் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முகநூல் மூலம் காதல்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மேட்டுமிஷின் பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 24). ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், சேலம் இரும்பாலை கீரைபாப்பாம்பாடி சுப்பிரமணிநகர் பகுதியை சார்ந்த சதீஷ்குமார் (29) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
சதீஷ்குமார், கோவை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணி செய்து வந்தார். முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
திருமணம்
இதைதொடர்ந்து கடந்த (2020) ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொள்வதாக கூறி சத்யாவுடன், சதீஷ்குமார் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. தொடர்்ந்து திருமணத்துக்கு சத்யா வற்புறுத்தவே, அதே ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தனது தங்கைக்கு திருமணம் ஆன பிறகு சத்யாவை வீட்டுக்கு அழைத்து செல்வதாக சதீஷ்குமார் கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்ததாக தெரிகிறது. 
போலீஸ்காரர் மீது வழக்கு
இதற்கிடையே சதீஷ்குமார் தங்கைக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. உடனே சத்யா, சதீஷ்குமாரிடம் என்னை உங்களது வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்துங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு சதீஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சத்யா, சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை நடத்தி, காதல் மனைவியுடன் வாழ மறுத்த போலீஸ்காரர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்