மணல் கடத்தல், ‘போக்சோ’ வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மணல் கடத்தல், போக்சோ வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-07-22 14:22 GMT
வாய்மேடு, 

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் நடுக்காடு பகுதியை சேர்ந்த முத்துச்செல்வன் மகன் வைத்தியநாதன் (வயது25). இவர் கடந்த மாதம் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வாய்மேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் அருண் தம்புராஜ், வைத்தியநாதன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதேபோல வாய்மேடு அருகே உள்ள பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியை சேர்ந்த கணேசன் மகன் ராமமூர்த்தி (30) என்பவர் கடந்த மாதம் 11 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்ததாக ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைதாகி, நாகை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுகளின் நகல் சம்பந்தப்பட்ட 2 பேரும் அடைக்கப்பட்டுள்ள நாகை சிறையின் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து 2 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் செய்திகள்