ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் தர்ணா

நிலுவைத்தொகை வழங்கக்கோரி உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-22 15:13 GMT
உத்தமபாளையம்:

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசு ஒப்பந்ததாரர்கள் 35 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 13 ஊராட்சிகளிலும் செயல்படுத்துகிற பணிகளுக்கு கட்டுமான பொருட்களை வழங்கினர். இதற்காக ரூ.1½ கோடி வரை பாக்கி உள்ளது.

இந்த நிலுவைத்தொகையை வழங்கக்கோரி, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க செயலாளர் தவசெல்வம் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. கட்டுமான பொருட்கள் வழங்கியதற்கு உரிய பணத்தை விரைவாக வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யப்பன், திருப்பதிவாசகன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்ட அரசு ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு ஒப்பந்ததாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்