சேற்றில் சிக்கிய சரக்கு வாகனம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சரக்கு வாகனம் சேற்றில் சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-22 18:07 GMT
ஊட்டி,

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சரக்கு வாகனம் சேற்றில் சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சேற்றில் சிக்கியது

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் அடியில் மழைநீர் செல்ல குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பணி நடைபெறும் இடங்கள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இந்தநிலையில் நேற்று குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு கேரட் மூட்டைகளை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் மரப்பாலம் அருகே சேற்றில் சிக்கியது. டிரைவர் தொடர்ந்து இயக்க முயன்றும் சரக்கு வாகனம் நகரவில்லை.  இதனால் முன்னும், பின்னும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீண்ட வரிசையில்...

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குன்னூரில் இருந்து வாகனங்களை கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு திருப்பி விட்டனர். 
பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாகன ஓட்டிகள் உதவியுடன் சேற்றில் சிக்கிய சரக்கு வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வாகனம் மீட்கப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்