குடியாத்தத்தில் மகளிர் குழுவினர் போராட்டம்

குடியாத்தத்தில் கடன்வழங்காமல் 2 ஆண்டுகளாக அலைக்கழிப்பதாக கூறி மகளிர் குழுவினர் வங்கி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-22 18:46 GMT
குடியாத்தம்

கடன் வழங்காமல் அலைக்கழிப்பு

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கதிர் குளம் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தை சேர்ந்த 44 மகளிர் குழு உறுப்பினர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை மூலம் கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் பெற வங்கி அதிகாரிகளை அணுகி உள்ளனர். 

அப்போது வங்கி அதிகாரிகள் கரவை மாடுகள் வாங்க கடன் வழங்குவதாகவும், அதற்கு ஒவ்வொருவரும் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும், ஒவ்வொரு கணக்கிற்கும் தலா ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகையாக கட்டுமாறு தெரிவித்துள்ளனர். அதன்படி தலா ரூ.10 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர். அதன்பிறகு 2 ஆண்டுகள் ஆகியும் வங்கியில் கடனுதவி தரவில்லை என கூறப்படுகிறது. பலமுறை கேட்டும், பல்வேறு காரணங்களை கூறி அலைகழித்ததாக கூறப்படுகிறது. 

போராட்டம்

இதனையடுத்து கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று 50-க்கும் மேற்பட்ட கதிர்குளம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பெண்கள் வங்கியின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்