வாலாஜா அருகே; கருப்பு கொடியுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வாலாஜா அருகே பொதுமக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி கணபதி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 20 வருடங்களாக சாலை, கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் குடிநீர் பிடிப்பதற்காக அப்பகுதி பெண்கள் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மழை நீருடன் கழிவு நீர் கலந்து விடுவதால் அதில் நடந்து செல்லும் போது தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை கண்டித்தும், அடிப்படை வசதி செய்து தரக்கோரியும் நேற்று பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.