12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-22 19:10 GMT
சிவகாசி, ஜூலை.
சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனை
சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் நேற்று காலை அலுவல் பணி காரணமாக தனது வாகனத்தில் சிவகாசியிலிருந்து விருதுநகர் சென்றார். வடமலாபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியில் அரிசி மூடைகள் இருப்பதை கண்டு சந்தேகத்தின் பேரில் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த பாண்டி மகன் மலைமன்னன் என்பவரை பிடித்து தாசில்தார் ராஜ்குமார் போலீசில் ஒப்படைத்தார். 
சிவகாசி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து இடைத்தரகர்கள் அரிசியை வாங்கி வெளியூர்களுக்கு கடத்துவதாக ஏற்கனவே தினத்தந்தியில் செய்து வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வந்தனர்.
2 இடங்களில் பறிமுதல்
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களில் 2 இடங்களில் ரேஷன் அரிசி கடத்தலை அதிகாரிகள் முறியடித்து அரிசி மூடைகளை பறிமுதல் செய்துள்ளனர். ரேஷன் கடைகளில் இருந்து அரிசி வாங்குபவர்களை தொடர்ந்து கண்காணித்து அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்