வளையப்பட்டி அருகே பஸ்- மோட்டார்சைக்கிள் மோதல்; நகைக்கடை தொழிலாளி பலி டிரைவர் கைது

வளையப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் ேமாதிய விபத்தில் நகைக்கடை ஊழியர் பலியானார். பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-22 22:41 GMT
மோகனூர்:

மோகனூர் அருகே என்.புதுப்பட்டியை அடுத்த நல்லூரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37). நாமக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனது மாமனார் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக தனது மோட்டார்சைக்கிளில் கொண்டு இருந்தார். 
அப்போது வளையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ரவிக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். 
டிரைவர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மோகனூர் போலீசார் பலியான ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இந்த விபத்து தொடர்பாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருச்சி மணிகண்டம் பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ரவிக்குமாருக்கு கற்பகம் (29) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்