தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
வீட்டுமனை பட்டா கேட்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.புதுக்கோட்டை, புதுசுக்லாபுரம், ராமசாமிபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய 4 கிராம மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் தனுஷ்கோடி, முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் அவர்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுவில், பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வழிவிடு முருகன் கோவில் பின்புறத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். நீண்ட நாட்களாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை வழங்கவில்லை. எங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்