சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வந்து குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2021-07-23 17:14 GMT
கொடைக்கானல்: 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 

இதில் பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் மூடப்பட்டது. எனினும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று காலை முதலே 500-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களிலும், ஏராளமான கார்களிலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். 

இதன் காரணமாக ஏரிச்சாலை முதல் அப்சர்வேட்டரி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். 


இதற்கிடையே கடந்த சில நாட்களாக கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


எனவே கேரள மாநில சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் உள்ளதா?, தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா? என்று சரி பார்த்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்