வீடு தேடி சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோத்தகிரியில் மாணவர்களுக்கு வீடு தேடி சென்று அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

Update: 2021-07-25 21:54 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் மாணவர்களுக்கு வீடு தேடி சென்று அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

கணக்கெடுப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. ஆனாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமையில் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் படிக்கிறார்களா? என்று வீடு, வீடாக சென்று கள ஆய்வு நடத்தி வருகின்றனர். 

மேலும் ஸ்மார்ட் போன், கணினி போன்ற வசதி இல்லாத(ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத) மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பாடம் நடத்துகின்றனர்.

நேரில் சென்று...

இதேபோன்று கட்டபெட்டு பாக்கியநகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கோத்தகிரி, கட்டபெட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

பள்ளி மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வந்தனர். அதை விட நேரில் சென்று பாடம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அதன்படி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

தங்கு தடையின்றி...

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா கூறியதாவது:- எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 100 மாணவர்கள் படிக்கின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே தோட்ட தொழிலாளர்கள்தான். 

எனவே படிப்பை தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும் என்பதற்காக வீடுகளுக்கு சென்று பாடம் கற்பித்து வருகிறோம். வீட்டு பாடங்கள் கொடுத்து, மாணவர்கள் எழுதுவதை உறுதிபடுத்துகிறோம். மாணவர்கள் பாடங்களை மறக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்