செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; குழந்தையை கடத்த முயற்சி உறவினர்கள் முற்றுகை

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவருடைய குழந்தையை கடத்த முயன்ற வெல்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-07-26 03:10 GMT
தாம்பரம்,

செங்கல்பட்டு அருகே உள்ள பள்ளியகரம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண், தன்னுடைய 2½ வயது குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். குழந்தைக்கு துணையாக அவரும் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தார்.

அப்போது செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாக வெல்டிங் வேலை செய்து வந்த சுரேந்திரன் (வயது 42) என்பவர், குழந்தையின் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், கூச்சலிட்டதால் அவரது குழந்தையை சுரேந்திரன் கடத்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

உறவினர்கள் முற்றுகை

இதற்கிடையில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடியதால் சுரேந்திரன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், சுரேந்திரனை உடனடியாக கைது செய்யக்கோரி செங்கல்பட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டீன் முத்துகுமரனின் வாகனத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். வெல்டர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக டீன் மற்றும் போலீஸ் தரப்பில் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெல்டர் சுரேந்திரனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்