அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டதால் பரிதாபம்: மின்சாரம் தாக்கி நெசவு தொழிலாளி பலி

ஆர்.கே.பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி நெசவு தொழிலாளி சுருண்டு விழுந்து பலியானார்.

Update: 2021-07-26 05:56 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணப்பன் (வயது 50). நெசவு தொழிலாளியான இவர், நேற்று அதிகாலை கிராமத்திற்கு அருகில் இருந்த வயல் வெளிக்கு இயற்கை உபாதையை கழிக்க நடந்து சென்றார். அப்போது முன்தினம் இரவு காற்றுடன் பெய்த மழை காரணமாக அப்பகுதியில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. அந்த கம்பி அங்கிருந்த செடிகொடியில் தொங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காத மண்ணப்பன் மின்கம்பியை தொட்டார்.

அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர், அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக செத்தார்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை அதிகாரிகள் தடை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார் இறந்து கிடந்த மண்ணப்பன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்