விநாயகர் வேடமிட்டு இந்து மக்கள் கட்சியினர் மனு

சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதிக்கோரி, விநாயகர் வேடமிட்டு இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.

Update: 2021-07-26 15:12 GMT
திண்டுக்கல்:

இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ரவிபாலன், தென்மாநில செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதில் மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் விநாயகர் வேடமிட்டு, முககவசம் அணிந்து வந்தார். 

அப்போது அந்த கட்சியினர், விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், தமிழகத்தில் வருகிற 10.9.2021 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே, கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான அனுமதிக்கு மறுக்கக் கூடாது. சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலம் செல்வதற்கும் அரசு அனுமதி வழங்க வேண்டும். 

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் இந்துக்களையும், பாரத மாதாவையும் இழிவுபடுத்தி பேசிய பாதிரியார் மீது ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்