திருவாரூரில் கரடு, முரடாக காட்சி அளிக்கும் மாவட்ட நூலக சாலை வாசகர்கள் அவதி

திருவாரூரில் மாவட்ட நூலக சாலை கரடு, முரடாக காட்சி அளிப்பதால் வாசகர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2021-07-26 15:36 GMT
திருவாரூர், 

திருவாரூர்- நாகை பைபாஸ் சாலையில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. ஏராளமான வாசகர்களை கொண்ட இந்த நூலகத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். குறிப்பாக போட்டி தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அதிகமாக நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நூலகத்துக்கு செல்லும் தார்ச்சாலை மிகவும் சேதம் அடைந்து, ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. கரடு, முரடாக காட்சி அளிக்கும் இந்த சாலை வழியாக நூலகத்துக்கு செல்லும் வாசகர்கள் அவதிப்பட வேண்டி உள்ளது.

பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதாக வாசகர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள். இந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். நூலகத்தினை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிகின்றன. எனவே சுற்றுச்சுவர் அமைத்து, சாலையின் இருபுறங்களிலும் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்