பவர் டேபிள் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக, சங்க கூட்டத்தில் தீர்மானம்

பவர் டேபிள் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக, சங்க கூட்டத்தில் தீர்மானம்

Update: 2021-07-26 15:54 GMT
திருப்பூர்
கட்டண உயர்வு வழங்கக்கோரி நாளை (புதன்கிழமை) முதல் பவர் டேபிள் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக, சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செயற்குழு கூட்டம்
திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம் லட்சுமிநகரில் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு சங்க தலைவர் நாகராஜ் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் சங்கர், துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க செயலாளர் நந்தகோபால், கட்டண உயர்வு பேச்சு தொடங்குவது குறித்து சைமா சங்கத்தின் பதில் கடிதம் குறித்து விரிவாக பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
நாளை முதல் உற்பத்தி நிறுத்தம்
எரிபொருட்கள், நுால் விலை உயர்வால், பவர்டேபிள் நிறுவனங்களில் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. கடந்த 2016-ல் போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்து 9 மாதம் ஆகிறது. பவர்டேபிள் நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றன. சில சிறிய உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், பவர்டேபிள் கட்டணத்தை உயர்த்தி வழங்கிவருகின்றன.
ஆனால், பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே சம்பள உயர்வு வழங்க முடியும் என்கின்றன. கட்டண உயர்வு வழங்க மேலும் தாமதித்தால், பவர்டேபிள் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
அனைத்து ஆடை உற்பத்தி நிறுவனங்களும் கட்டண உயர்வு வழங்கவேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, நாளை (புதன்கிழமை) முதல் பவர்டேபிள் நிறுவனங்கள் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது. கட்டண உயர்வு வழங்காத பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பது நிறுத்தப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்