குத்தாலம் அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு

மல்லியத்தில் இருந்து அசிக்காடு வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

Update: 2021-07-26 16:24 GMT
குத்தாலம், 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மல்லியத்தில் இருந்து அசிக்காடு வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதற்காக பொக்லின் எந்திரம் மற்றும் ஆட்களை கொண்டு சாலை விரிவாக்க பணி நடந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் பொக்லின் எந்திரம் மூலம் சாலையின் ஓரம் குழி தோண்டிய போது ஒரு சிலை காணப்பட்டது. அதை தோண்டி எடுத்த போது அது 3¼ அடி உயரமும், 1 அடி அகலமும் உடைய அம்மன் கருங்கல் சிலை என்பது தெரிய வந்தது. இதையடுத்து பணியாட்கள் கொடுத்த தகவலின்பேரில் ஆணைமேலகரம் கிராம நிர்வாக அதிகாரி குலோத்துங்கன் மற்றும் அசிக்காடு கிராம நிர்வாக அதிகாரி ராஜ்மோகன் அங்கு விரைந்து வந்து சிலையை மீட்டு மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்துவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அம்மன் சிலை மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்