ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் தின்றனர்-கணவர் சாவு

கொரோனாவால் வேலை இழந்ததால் வறுமைக்கு தள்ளப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் தின்றனர்

Update: 2021-07-26 20:36 GMT
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் சண்முகா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). இவர் சென்னையில் உள்ள ஹார்டுவேர்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த 1½ ஆண்டாக வேலை இல்லாமல் துறையூரில் உள்ள தனது வீட்டில் சுப்பிரமணி இருந்து வந்தார். இவரது மனைவி மாலா (34). இந்த தம்பதிக்கு சஞ்சனா(9), சகானா(4) ஆகிய 2 பெண் குழந்தைகள். துறையூரிலும் சரியான வேலை எதுவும் அமையாததால் குடும்பத்தை நடத்த முடியாமல் சுப்பிரமணி சிரமப்பட்டு வந்துள்ளார். அவரது குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.  நேற்று காலை மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுக்கும் காலை உணவில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு தானும் அந்த உணவை சாப்பிட்டார். இதனை சாப்பிட்ட 4 பேரும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து வீட்டில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார். மாலா மற்றும் 2 குழந்தைகள் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்