கீழ்வேளூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

கீழ்வேளூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

Update: 2021-07-27 10:58 GMT
சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சித்ரா (வயது51). நேற்று முன்தினம் இவர் தனது மகன் ரஞ்சித்குமாருடன் ஸ்கூட்டரில் திருவாய்மூரில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை ரஞ்சித்குமார் ஓட்டிச்சென்றார்.

சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தேவூர் மெயின்ரோட்டில் உள்ள அய்யடிமங்கலம் சாலை சந்திப்பில் சென்ற போது ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த சித்ரா எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்