தப்பி ஓடிய விசாரணை கைதி சிக்கினார்

பழனி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி சிக்கினார்.

Update: 2021-07-27 13:04 GMT
பழனி:

பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் துர்க்கைவேல். கொத்தனார். கடந்த 13-ந்தேதி இவர், பழனி குளத்துரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கத்தியால் வெட்டி பணம், செல்போனை 3 பேர் பறித்து சென்றனர். 

இது தொடர்பாக பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி கவுண்டன்குளத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 23), 14-வது வார்டை சேர்ந்த மாசாணம் (20), மதனபுரத்தை சேர்ந்த ஜீவா (21) ஆகியோரை கைது செய்தனர். இதில், தப்பி ஓடியபோது ஜீவாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர், பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சையில் இருந்தபோது, கழிப்பறை செல்வதாக கூறிவிட்டு ஜீவா தப்பி சென்று விட்டார். 

இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளைத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஜீவா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று ஜீவாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்