ரூ.3¾ கோடி வரி விவகாரம்: கார்த்தி சிதம்பரத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ரூ.3.86 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-28 22:50 GMT
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015-ம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள சொத்துகளை விற்பனை செய்துள்ளார். அப்போது ரொக்கமாக பெற்ற தொகை ரூ.6.38 கோடியை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் கடந்த 2014-2015 மற்றும் 2015-2016-ம் ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை, வருமான வரித்துறை மறுமதிப்பீடு செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மேல்முறையீடு செய்து, அந்த வழக்கு டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணையில் உள்ளது.

ரூ.3.86 கோடி வரி

இந்த நிலையில் கடந்த 2014-2015-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்து ரூ.3.86 கோடி வரி செலுத்த வேண்டும் எனக்கூறி கார்த்தி சிதம்பரத்துக்கு வருமான வரித்துறை கடந்த ஜூலை 15-ந்தேதி மீண்டும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், ‘‘தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், வருமான வரித்துறை ரூ.3.86 கோடி வரி செலுத்தக்கோரி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பு என் தரப்பில் விளக்கத்தை அளிக்க போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை’’ என்று கூறியிருந்தார்.

ரத்து

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘‘வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் வருமான வரித்துறை 5 வாரங்களுக்குள், கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம் அளிக்க போதுமான கால அவகாசத்தை வழங்கி, மறு மதிப்பீடு தொடர்பாக மறு உத்தரவிட வேண்டும்’’ என்று உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்