பெரம்பலூர், புதுக்கோட்டையை சேர்ந்த 2 வாலிபர்களிடம் செல்போன், பணம் பறிப்பு 3 பேர் கைது

பெரம்பலூர், புதுக்கோட்டையை சேர்ந்த 2 வாலிபர்களிடம் செல்போன், பணம் பறித்துச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-07-29 01:20 GMT
திருச்சி, 
பெரம்பலூர் மாவட்டம் சரவணபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36) கொத்தனாராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தூத்துக்குடி செல்லும் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் குமாரை இரும்பு கம்பியால் தாக்கி அவரிடம் இருந்த பையை பறித்துச் சென்றனர். 
மேலும் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கங்காதரனையும் (24) அவா்கள் இரும்பு கம்பியால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.9 ஆயிரத்து 500-ஐ பறித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (21), ஆடம் (20), சரவணகுமார் (22) மற்றும் தினேஷ் ஆகியோர் அவா்களிடம் செல்போன், பணம், பையை பறித்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மைக்கேல் ராஜ், ஆடம், சரவணகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தினேசை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்