கொரோனா பரவல் 0.5 சதவீதமாக சரிவு

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.

Update: 2021-07-29 15:54 GMT
தேனி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் அலையை காட்டிலும் 2-வது அலையின் தாக்கம் கடுமையாக இருந்தது. தேனி மாவட்டத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆயிரத்து 891 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மே மாதத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 207 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது.
0.5  சதவீதமாக சரிவு
பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்ததால் கடந்த மே மாதம் மாவட்டத்தில் நோய் பரவல் 32 சதவீதமாக இருந்தது. அதாவது, 100 பேருக்கு நடத்தும் பரிசோதனையில் 32 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு அரசு மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது.அதன்படி நேற்று கொரோனா தொற்று பரவல் 0.5 சதவீதமாக குறைந்தது. அதாவது, 2,272 பேருக்கு பரிசோதனை செய்ததில் 12 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் நோய் பரவல் வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 42 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 514 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்