கல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு. 4 பேர் கைது

கல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

Update: 2021-07-29 18:16 GMT
வேலூர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு வேலூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. வேலூர் பலவன்சாத்து அண்ணாநுழைவு வாயில் அருகே நள்ளிரவில் வந்தபோது மர்மநபர்கள் திடீரென பஸ் மீது கற்களை வீசினார்கள். இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து இறங்க முயன்றனர். அதையடுத்து டிரைவர் உடனடியாக சாலையோரம் பஸ்சை நிறுத்தினார்.

 பின்னர் டிரைவர், கண்டக்டர் இறங்கி சென்று மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து ஆரணியை சேர்ந்த டிரைவர் தங்கராசு பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில், விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த கணேஷ் (வயது 22), ரசூல் (24), சூர்யா (22), அப்பு (23) ஆகியோர் பஸ் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்