மனைவி, கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு
நள்ளிரவில் உல்லாசத்தில் ஈடுபட்ட கள்ளக்காதலன், மனைவியை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி,
நள்ளிரவில் உல்லாசத்தில் ஈடுபட்ட கள்ளக்காதலன், மனைவியை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல்
கன்னியாகுமரி அருகே தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 36). அவருடைய மனைவி ஸ்ரீமதி (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகிறது. 10 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் ஸ்ரீமதிக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்வன் (34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.
அரிவாள் வெட்டு
இதனை அரசல், புரசலாக அறிந்த அய்யம்பெருமாள், மனைவி ஸ்ரீமதியை கண்டித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் அய்யம்பெருமாள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மற்றொரு அறையில் தூங்கிய ஸ்ரீமதிக்கு, திடீரென கள்ளக்காதலன் செல்வனின் நினைவுகள் அவரை வாட்டியது. பின்னர் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் சத்தம் கேட்டு கண்விழித்த அய்யம்பெருமாள், தன்னுடைய மனைவியின் அறைக்கு சென்று பார்த்தார்.
அங்கு மனைவியுடன் செல்வன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த அய்யம்பெருமாளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீமதி, செல்வன் ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த 2 பேரும் உயிருக்காக போராடினர்.
போலீஸ் விசாரணை
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரி போலீசார் உதவியுடன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.