கும்மிடிப்பூண்டி அருகே கொல்கத்தாவில் இருந்து பஸ்சில் சாராயம் கடத்தி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி அருகே கொல்கத்தாவில் இருந்து பஸ்சில் எரிசாராயம் கடத்தி வந்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-31 06:13 GMT
எரிசாராயம் கடத்தல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணம் செய்த 2 பேரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அவர்கள் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 10 லிட்டர் எரிசாராயம் பாட்டிலில் கடத்தி வந்தது தெரியவந்தது.இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொல்கத்தாவை சேர்ந்த சுப்ராதகிரி (வயது 29), கருள்தரா (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். எரிசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா சிக்கியது
அதேபோல் அந்த வழியாக சென்னை மாதவரம் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ஒன்றரை கிலோ எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தை சேர்ந்த சதிஷ் (22), மோசஸ் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்