அரசு பஸ் மோதி பெண் பலி

செம்பட்டி அருகே அரசு பஸ் மோதி பெண் பலியானார்.

Update: 2021-07-31 12:19 GMT
செம்பட்டி:

செம்பட்டி அருகே உள்ள சிங்காரக்கோட்டையை அடுத்த ரெங்கராஜபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 45). கட்டிடதொழிலாளி. இவர், தன்னுடன் சித்தாள் வேலை செய்த பாளையங்கோட்டையை சேர்ந்த பழனியம்மாள் (45) உள்பட 2 பெண்களை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கடந்த 29-ந்தேதி பாளையங்கோட்டை நோக்கி சென்றார்.

சித்தையன்கோட்டை கடைவீதி விநாயகர் கோவில் அருகே செல்லும்போது, வேகத்தடையில் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து போடிக்காமன்வாடிக்கு சென்ற அரசு பஸ்சில் பின் சக்கரம், பழனியம்மாள் மீது ஏறியது. இதனால், சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார்.

ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பெண்ணும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தநிலையில் பழனியம்மாள் மீது பஸ் சக்கரம் ஏறி அவர் பலியான காட்சி, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் (சி.சி.டிவி) பதிவாகி இருந்தது. நெஞ்சை உருக்கும் வகையிலான அந்த வீடியோ, தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்