உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஒப்பந்த அடிப்படையில் வேலை
கடலூர் மாவட்டம் நெய்வேலி 30-வது வட்டம் தேவன் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் மணிகண்டன்(வயது 36). பெயிண்டர். இவர் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டு அடிக்கும் வேலை செய்து வந்தார்.
இவரை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திய கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, வேலை செய்ததற்கான ஊதியமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை அவ்வபோது, அந்த நிறுவனத்தின் நிர்வாகி சிவக்குமார் என்பவரிடம் மணிகணடன் கேட்டுவந்துள்ளார். ஆனால் சிவக்குமார் பணத்தை கொடுப்பதில் காலம் கடத்தி வந்தார்.
வீடியோ வெளியிட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதை தனது உறவினர்களின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்திருந்தார். அதில், தனக்கு கோவையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தனக்கு ஊதியமாக தர வேண்டி உள்ளது. இதை தராமல் அவர் மறுத்து வருகிறார். இதனால் தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீஸ் விசாரணை
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனுக்கு மலர்விழி (வயது 32) என்கிற மனைவியும், மதுமித்ரா (15), மதுமதி (13), திவான் (11) என்று 3 பிள்ளைகள் உள்ளனர்.