மின் மோட்டார் அமைக்க சுவரில் துளையிட்ட போது பரிதாபம்: மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி

குடிநீர்தொட்டியில் மின் மோட்டார் அமைக்க சுவரில் துளையிட்டபோது மின்சாரம் தாக்கி பிளம்பர் பலியானார்.

Update: 2021-08-01 05:03 GMT
சுவரில் மின்கசிவு
சென்னை கொளத்தூர் அடுத்த வெற்றிநகர் தட்சிணாமூர்த்தி தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 24) பிளம்பர். இவர் நேற்று முன்தினம் திரு.வி.க நகரில் உள்ள கிருஷ்ணா நகர் முதல் தெருவில் உள்ள ராபின்சன் மோசஸ் என்பவரது வீட்டில் குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.அப்போது துளையிடும் கருவி (டிரில்லிங் மெஷிண்) மூலம் அங்கிருந்த சுவரில் துளை போடும்போது சுவரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்து கிடந்தார்.உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசில் புகார்
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் தினேஷ் அடித்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது தந்தை சரவணன் திரு.வி.க. நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த திரு.வி.க. நகர் போலீசார் செல்வம் (42), வீட்டின் உரிமையாளர் ராபின் மோசஸ் (40) மற்றும் மேற்பார்வையாளர் சக்தி கிஷாந்த் (29) ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்