துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை

துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை

Update: 2021-08-02 18:04 GMT
ராமநாதபுரம்
முதுகுளத்தூரை அடுத்துள்ள காக்கூர் அருகே உள்ள புளியங்குடியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி சண்முகவள்ளி. இவர் நேற்று தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் குமரவேல் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினார். இதன்படி அவர் கடந்த 10 ஆண்டுகளாக துபாய் நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த பணியாக கூலி வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திரும்பி சென்றார். அங்கிருந்து தினமும் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் கடந்த 26-ந் தேதி துபாயில் இருந்து எனது கணவர் இறந்துவிட்டதாக செல்போனில் பேசியவர் தகவல் தெரிவித்தார். அவர் என்ன ஆனார், எப்படி இறந்தார் என்பதுபோன்ற விவரங்கள் சரியாக தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் மன வேதனையில் தவித்து வருகிறோம். எனது கணவரின் இறப்பில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து காரணத்தை உறுதி செய்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்