தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பணிகள் நடைபெறவில்லை கனிமொழிக்கு மத்திய மந்திரி பதில்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பணிகள் நடைபெறவில்லை கனிமொழிக்கு மத்திய மந்திரி பதில்.

Update: 2021-08-03 14:08 GMT
சென்னை,

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, ‘தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் 2020 நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் உறிஞ்சும் பணிகளுக்கான ஏலத்தை தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை மந்திரி ரமேஷ் தெலி கூறியதாவது:-

‘சிறிய அளவிலான நிலப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் பணிக்காக 3-வது சுற்று ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 75 இடங்களில் 13 ஆயிரத்து 204 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 35 ஒப்பந்தங்களைக் கோரி இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது. இவற்றில் இரு பெட்ரோலிய சுரங்க குத்தகையை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தம் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை வடத்தெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்டிருக்கிறது. இந்த இரு பெட்ரோலிய சுரங்க குத்தகைகளும் 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டவை. இப்போது தமிழகத்தில் எந்த ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் பணியும் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்