தந்தை, மகன் தற்கொலை

கொல்லங்கோடு அருகே தந்தை, மகன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-08-03 21:27 GMT
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே தந்தை, மகன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மகனுக்கு மதுபழக்கம்
கொல்லங்கோடு அருகே புஷ்பகிரி பகுதியை சேர்ந்தவர் அப்புகுட்டன் (வயது 64), இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 
இவருடைய மகன் ஷாபு (38), தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் தந்தையுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தந்தை சாவு
மகன் ஷாபுவை எப்படியாவது திருத்தி விடலாம் என்று நினைத்த அப்புகுட்டனுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிகிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்புற்ற அவர், நேற்றுமுன்தினம் விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அப்புகுட்டன் பரிதாபமாக இறந்தார். 
மகனும் தற்கொலை
அப்போது அங்கு வந்த ஷாபுவை, அப்புகுட்டனின் உறவினர்கள் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த ஷாபு குற்ற உணர்ச்சியுடன் வீட்டின் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் ஷாபு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை வாகனத்தில் ஏற்றி சென்று கேரள மாநிலம் பாறசாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஷாபு இறந்து விட்டதாக கூறினர். 
ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து சில மணி நேரத்தில் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.மேலும் இந்த சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்