வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் கஞ்சா பறிமுதல்

நாகூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2021-08-05 16:52 GMT
நாகூர்:
நாகூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் அறிவுறுத்தல் படியும், நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
 இந்த நிலையில் நாகையை அடுத்த நாகூர் யூசுப்பியா நகரில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
கண்காணிப்பு பணி
ரகசிய தகவலின் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் (பொறுப்பு), நாகூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது 2 பேர் ஒரு வீட்டில் இருந்த பார்சல் பண்டல்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இதை  பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவர்களிடம் இருந்த பர்சல் பண்டல்களை பிரித்து பார்த்தனர். இதில் 20 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது.
ரூ.1 லட்சம் கஞ்சா பறிமுதல்
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நாகூர் யூசுப்பியா நகரை சேர்ந்த ஜெய்னூல் உசேன் மகன் முகமது இத்ரீஸ் (வயது 27), நாகூர் வண்ணாகுளத்தை சேர்ந்த  குமார் (41) என்பதும், இவர்கள் வீட்டி்ல பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றும் தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இத்ரீஸ், குமாரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 20 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்