பிளம்பர் கொலை வழக்கில் 8 பேர் கைது

பிளம்பர் கொலை வழக்கில் 8 பேர் கைது.

Update: 2021-08-05 16:56 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்தகாயத்துடன் 24 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதை கண்டனர். வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார் மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

இறந்து கிடந்தது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மதன்குமார் (வயது 24) என்பதும் பிளம்பர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திபேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அவருடன் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 5 பேர் தங்கி இருந்தனர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மதன்குமாரிடம் சிலர் பணம் கேட்டு கொடுக்காததால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது தெரியவந்தது. எனவே, இப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், பூச்சி அத்திப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர்களான மணிகண்டன் (20), மதன் (25), சிவா (28), புவனேஷ் (23), சந்துரு (27), நாகராஜ் (25), சுனில் (23), கோடுவெளி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (21) ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், உள்ளூர்காரர்களான நாங்கள் கேட்கும்போது செலவுக்கு பணம் தராததால் ஆத்திரமடைந்து மதன்குமாரை அடித்துக் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்