மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது
கன்னிவாடி அருகே மின்மோட்டார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராசு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே ஊரை சேர்ந்த கோட்டை முனியப்பன் (வயது 35), மணியக்காரன்பட்டியை சேர்ந்த சரவணன் (31) ஆகியோர் சேர்ந்து மின்மோட்டாரை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் விற்பனை செய்வதற்காக, மின்மோட்டாரை தோட்டத்தின் அருகே எடுத்து வந்தபோது 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வேடசந்தூர் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.