ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Update: 2021-08-11 18:16 GMT
பென்னாகரம்:
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
கர்நாடகம் மற்றும் கேரள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 
இந்த நிலையில் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9,550 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த தண்ணீர் படிப்படியாக குறைந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக வந்தது. 
கண்காணிப்பு
இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்