போலீஸ் நிலையம் முன்பு மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் முன்பு மகன், மகளுடன் பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-14 16:14 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் முன்பு மகன், மகளுடன் பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தீக்குளிக்க முயற்சி

பேரணாம்பட்டு டவுன் சாலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நித்யா (வயது 31),தையல் தொழிலாளி. இவர் தனது மகன் நிகிதன் (12), மகள் வைஷ்ணவி (11) ஆகியோருடன் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். 

அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த பெட்ரோலை தன் மீதும் தனது மகன், மகள் மீதும் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். 

உடனே அங்கு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அவரை தடுத்தனர். பின்னர் நித்யாவிடம்  இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு விசாரணை நடத்தினார். 

அப்போது, எதுவாக இருந்தாலும் புகாராகத்தான் தெரிவிக்க வேண்டும். இப்படி தீக்குளிக்க முயற்சிப்பது தவறு என எச்சரிக்கை செய்தார்.

காதல் திருமணம்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நித்யா கடந்த 2007-ம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த பார்த்தீபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கணவர் இறந்து விட்டார். 

இதையடுத்து கணவரின் குடும்பத்தினர் ரூ.1 லட்சத்தை குழந்தைகளுக்கு தருவதாக கூறினர். ஆனால் பணத்தை தரவில்லை. இதுகுறித்து  கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போலீசில் தெரிவித்தார். 

 இதனையடுத்து நித்யாவிடம் முறையாக புகாரை பெற்று அவரது மாமனார் முனிசாமி என்பவரிடம் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நித்யாவின் மகன், மகள் பெயரில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வதாக உறுதியளித்தார்.

இதன் பின்னர்  நித்யாவிற்கு போலீசார் அறிவுரை கூறி குழந்தைகளுடன் ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. .

மேலும் செய்திகள்